சென்னையில் வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பொறியாளர் கைது

செவ்வாய், 23 ஜனவரி 2018 (12:29 IST)
சென்னை கே.கே.நகரில் வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த பொறியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலர் போதைக்கு அடிமையாகி, தங்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றனர். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய இளைஞர்களே இப்படி போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது வேதனையளிப்பதாக பெற்றோர்களும் சமூக ஆர்வளர்களும் தங்களின் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கே.கே நகரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சார்லஸ் பிரதீப் தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பிரதீப் வீட்டு மாடியில் நடத்திய சோதனையில் மூலிகை செடிகளுடன் 4½ அடி உயரம் கொண்ட 7 கஞ்சா செடிகளும், அதனுடனிருந்த 1 கிலோ 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சார்லஸ் பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். 
 
பிரதீப்பிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் கஞ்சாவிற்கு அடிமையானதால் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து அதனை உபயோகித்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பிரதீப்பிற்கு எப்படி கஞ்சா செடி கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்