100 அடியை எட்டியது மேட்டூர் அணை.! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Senthil Velan

சனி, 27 ஜூலை 2024 (10:34 IST)
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்து காணப்பட்டது.  குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 93,828 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை 71 வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 63.69 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். எனவே காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ALSO READ: நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தது ஏன்? மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு..!!
 
காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்