தமிழர்கள் சபரிமலை வரணும்.. நியாபகம் வெச்சுக்கோங்க! – தமிழக அரசை எச்சரித்த கேரள அமைச்சர்!

Prasanth Karthick

வெள்ளி, 28 ஜூன் 2024 (11:01 IST)
தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு காலாண்டு வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக தமிழக அரசுக்கு கேரள போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்திற்கு சுற்றுலா வரும் வெளிமாநில வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் வரியும் உயர்த்தப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசிய கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் கணேஷ்குமார் “சுற்றுலா வாகனங்களுக்கான வரி உயர்வு குறித்து கேரள அரசிடம் தமிழகம் ஆலோசிக்கவில்லை. கேரளாவில் சபரிமலை சீசன் வருவதையும், சபரிமலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதையும் தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

கேரள மாநில வாகனங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் தமிழக வாகனங்களுக்கு வரி விதிப்போம். எங்கள் வாகனங்களை பறிமுதல் செய்தால், இங்கு தமிழக வாகனங்களை பறிமுதல் செய்வோம். எங்களுக்கு தீங்கிழைத்தால் நாங்களும் தீங்கை விளைவிப்போம்” என எச்சரிக்கும் தோனியில் பேசியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்