கமல்ஹாசன் கட்சியில் இணைந்த தமிழிசை? - விபரம் உள்ளே

செவ்வாய், 13 மார்ச் 2018 (13:00 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர்ந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தையும் அவர் நடத்தினார். அதன்பின், அந்த கட்சியில் இணைய இணையதளம் தொடங்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கை நடந்து வருகிறது. அவரது கட்சியில் பலரும் ஆர்வமுடன் தங்களை இணைத்து வருகிறனர்.
 
ஒருபக்கம், கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், மருத்துவர்கள் என பலரையும் சந்தித்து பேசி வருகிறார்.
 
இந்நிலையில், திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கு இ-மெயில் வந்துள்ளது. உறுப்பினர் எண்ணும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களை சேர்க்க கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார். இப்படி மோசடி நடைபெற்றால் அவர் கட்சியில் யாரெல்லாம் உறுப்பினர்கள் என எப்படி நம்புவது” என சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பினார்.
 
மேலும், தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்