தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் மேம்படுத்தப்பட உள்ளது. வருவாய் அடிப்படையில் நகராட்சிகள் மீளாய்வு செய்யப்பட்ட நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படுகின்றது.
இந்த நகராட்சிகளில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை மற்றும் பழனி ஆகியவை தேர்வு நிலை நகராட்சிகளாக இருந்து, இப்போது சிறப்புநிலை நகராட்சிகளாக உயர்த்தப்படுகின்றன. அதேபோல, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாக இருந்த நிலையில், இப்போது தேர்வு நிலைக்கு மாற்றப்படுகின்றன.
மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள், முதல்நிலை நகராட்சிகளாக மாற்றப்படுகின்றன.
இந்த தரமுயர்வு அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. நகராட்சிகளின் வருடாந்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில அரசு வகுத்துள்ள அளவுகோளின்படி, ரூ.15 கோடிக்கு மேற்பட்டவருமானம் உள்ளவை சிறப்புநிலை, ரூ.15 கோடி வரை உள்ளவை தேர்வு நிலை, ரூ.9 கோடி வரை உள்ளவை முதல்நிலை, மற்றும் ரூ.6 கோடிக்கு குறைவாக உள்ளவை இரண்டாம் நிலையாக வகைப்படுத்தப்படுகின்றன.