அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனை குற்றவாளியாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தண்டனையை ஜூன் 2ல் அறிவிக்க உள்ளது.
இந்த வழக்கு தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறையை பாராட்டியதுடன், அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பதிவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் திரு. மு.க.ஸ்டாலின்
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?
அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா?
அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் மு.க.ஸ்டாலின் அவர்களே!
"SIR"-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்டநீதிக்கும் - பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி!
இந்த ஆட்சி வீழும்!மக்களுக்கான அதிமுக ஆட்சி அமையும்! அந்த "SIR"-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
Edit by Prasanth.K