மெரினாவில் 144 போடுங்க..மீறினால் சிறையில் அடையுங்கள் - எடப்பாடிக்கு சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ்

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:28 IST)
சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உத்தரவு பிறப்பிப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர் சுப்பிரமணிய சுவாமி. தமிழக இளைஞர்கள் பொறுக்கிகள் என வெளிப்படையாகவே இவர் கருத்து தெரிவித்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல் அவர் வழக்கம் போல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
 
சசிகலாவை ஆட்சி அமைக்க வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அவரை அழைக்காததால், அவர் மீது வழக்கு தொடருவேன் என பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் “எடப்பாடி பழனிச்சாமி அரசு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை, மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு போட வேண்டும். அதையும் மீறி அங்கு கூடினால் குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து, ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். 


 
 
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்துகளை கூறிவரும் அவருக்கு டிவிட்டர் பக்கத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது..

வெப்துனியாவைப் படிக்கவும்