அரசு ஊழியர்கள் ஓய்வு நாளில் இடைநீக்கம்.! அரசியல் காழ்ப்புணர்ச்சி என அண்ணாமலை காட்டம்..!!

Senthil Velan

சனி, 1 ஜூன் 2024 (12:02 IST)
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நாளில் இடைநீக்கம் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று நடைபெற்ற  கோ பூஜையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் ஆகியோரை தரிசித்தார். 
 
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திருவண்ணாமலை ஏடிஎஸ்பி வெள்ளைதுரை நேற்று ஓய்வு பெறும் நாளன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அந்த அறிவிப்பு மீண்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது என்றார்.  அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓய்வு பெறும் நாளன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே பார்க்கிறேன் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டு உள்ள நிலையில் இதை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றனர் என்றும் யார் வேண்டுமானாலும் அரசியல் அமைப்பு சட்டப்படி தாங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம் என்றும் இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.

ALSO READ: நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை..! ஆபாச வீடியோக்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! பிரஜ்வல் ரேவண்ணா!
 
மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராக வருவார் என்றும் அதனால் தான் மோடி அவர்களின் கன்னியாகுமரி வருகையை அரசியல் செய்கின்றனர் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்