தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து, மாணவ மாணவிகள் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜூன் இரண்டாம் தேதி இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மேலும், மாணவ மாணவிகளை வரவேற்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பள்ளி வளாகங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காய்ச்சல் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், காய்ச்சல் இருந்தால் அது மற்ற மாணவிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தப்படுகிறது என்றும் முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சில பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.