’அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சசிகலா’ - ஜெ. வழக்கில் ஆச்சார்யா வாதம்

Webdunia
வியாழன், 5 மே 2016 (16:25 IST)
அதிமுக கட்சியையும், போயஸ் கார்டனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சசிகலா என்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல் ஆஜரான ஆச்சார்யா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
 

 
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா தரப்பு இறுதி வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், கர்நாடக தரப்பில் பதில் வாதத்தை தாக்கல் செய்ய கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவுக்கு 2-வது சுற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது.
 
நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ஆச்சார்யா செவ்வாயன்று தனது 2-வது சுற்று வாதத்தை தொடங்கினார். அப்போது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
 
தொடர்ந்து நேற்று புதன்கிழமை [04-02-16] அன்றும் வாதத்தைத் தொடர்ந்த ஆச்சார்யா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸின் சொத்து மதிப்பை ரூ. 66 லட்சம் என்று குறிப்பிட்டுள்ள சசிகலா தரப்பு, தற்போது உச்சநீதிமன்றத்தில் அதன் மதிப்பை வெறும் ரூ.13 லட்சமாக குறைத்து காட்டியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
 
இதையடுத்து முரண்பட்ட தகவலை நீதிமன்றத்திற்கு கூறியது ஏன்? என சசிகலா தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
மறுபுறம் வாதத்தை தொடர்ந்த ஆச்சாரியா, சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கியமான நபரான ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவர் சசிகலா; ஒரு அதிகாரமிக்க பெண்ணாக உலா வருபவர்; அதிமுகவில் சின்னம்மா என்று அழைக்கப்படும் அளவுக்கு சசிகலா செல்வாக்கு உண்டு; அதிமுக கட்சியையும், போயஸ் கார்டனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சசிகலா என்று கூறினார்.
 
அந்த வகையில்தான், சசிகலா உள்ளிட்டவர்கள், தாங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சட்டத்திற்கு உட்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக பல போலி நிறுவனங்களை உருவாக்கினர்; இந்த நிறுவனங்களில் எந்த பணியும் நடைபெறாது என்றபோதிலும், பணம் வருவதற்கான கணக்கை காட்டுவதற்காக இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று ஆச்சார்யா குறிப்பிட்டார்.
 
மேலும், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (மைக்கேல் டி குன்ஹா) வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்