ஜெ.விற்கு சிகிச்சையளிக்காமல் கொலை செய்தனர் - திண்டுக்கல் சீனிவாசன் பகீர் புகார்

சனி, 16 செப்டம்பர் 2017 (12:58 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உரிய சிகிச்சை அளிக்காமல், சசிகலா தரப்பு கொலை செய்து விட்டனர் என அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புகார் கூறியுள்ளார்.


 

 
தமிழக அரசு சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவான்சன் “ஜெயலலிதா நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க பலரும் முயன்றனர். அமித்ஷா, அருண் ஜேட்லி, ராகுல் காந்தி, வித்யாசாகர் ராவ் என எவரையும், ஜெ.வை பார்க்க சசிகலா தரப்பு அனுமதி தரவில்லை. பார்த்தால் நோய் தொற்று ஏற்படும் எனக் கூறிவிட்டனர். 
 
75 நாட்கள் அவருக்கு வார்டு பாய், நர்ஸ், மருத்துவர்கள் என அனைவரும் அவரை நேரில் பார்த்துள்ளனார். அவருக்கு ஏற்படாத நோய் தொற்று, எங்களுக்கும், வந்தவர்களுக்கும் வந்து விடும் என பொய்யை சொல்லி வந்தனர். 
 
யாராவது ஜெ.வை பார்த்தால் உண்மையை கூறிவிடுவார் என கருதிதான் யாரையும் சந்திக்க விடாமல் செய்து அவரை கொலை செய்து விட்டனர். அவருக்கு தேவையான மருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் வரவழைத்திருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல், நோய் முற்றி அவர் இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என அவர்கள் திட்டமிட்டே செயல்பட்டுள்ளார்கள். எனவேதான், அவர்களை அதிமுகவிலிருந்து விலக்கி விட்டோம். 
 
தற்போது 18 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு எதிராக தினகரன் சதி செய்து கொண்டிருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள்” என அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்