ஒரு வாரத்தில் ஆட்சி கவிழ்ப்பு - தினகரனின் திட்டம் என்ன?

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:33 IST)
ஒரு வாரத்தில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரை வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என தினகரன் இன்று பேட்டியளித்தார்.


 

 
சமீபத்தில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதோடு, பொதுச்செயலாளருக்குள்ள அதிகாரங்கள் அனைத்தும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.  
 
இதனால் கோபமடைந்த தினகரன், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என சூளுரைத்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என கெடுவும் விதித்தார். தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும், விரைவில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து சென்று அவர் ஜனாதிபதியிடமும் முறையிடுவார் எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன் “இந்த ஆட்சியை அகற்றும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று விடுவார்கள். சசிகலாவால் மட்டுமே இவர்கள் இருவரும் பதவியை அடைந்தார்கள். ஆனால், அவருக்கே துரோகம் செய்து விட்டனர். எனவே, இனிமேல் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்” என அவர் தெரிவித்தார்.
 
அதேபோல், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன், செப்.20ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது தங்களுக்கும் சாதகமான ஒன்று எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், ஆளுநரை சந்தித்து முறையிடுவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்திருப்பது என பல்வேறு வகைகளில் எடப்பாடி அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தினகரன். 
 
இந்நிலையில், கர்நாடக மாநிலம் கூர்க் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை நாளை தினகரன் நேரில் சென்று சந்திக்கவுள்ளார். அப்போது, எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
எனவே, தமிழக அரசியல் விரைவில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்