நடராஜன் பெயர் வரக்கூடாது : காய் நகர்த்தும் சசிகலா

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (08:16 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனது உறவினர்கள் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோர் போயஸ் கார்டனில் வசிக்க அனுமதி மறுத்துள்ளார்.


 

 
ஆரம்பத்தில் வீடியோ கேசட்டுகள் கடை வைத்திருந்த சசிகலா, போயஸ் காரடனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக காரணமாக இருந்தவர் அவரின் கணவர் நடராஜன். 
 
அந்நிலையில், சசிகலாவின் மொத்த குடும்பமும் போயஸ் கார்டனில்தான் வசித்து வந்தது. ஆனால் 2011ம் ஆண்டு, அவர்கள் தனக்கு துரோகம் செய்வதாக கூறிய ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் கார்டனிலிருந்து வெளியேற்றினார். 
 
அதன்பின், மன்னிப்பு கடிதம் எழுதிய சசிகலா, தனக்கு தெரியாமல் சில விஷயங்கள் நடந்துவிட்டதாகவும், கடைசி வரை ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருப்பேன் எனக்கூறி மீண்டும் போயஸ் கார்டனில் நுழைந்தார். ஆனால், அவரின் உறவினர் மற்றும் கணவர் நடராஜன் ஆகியவர்களுக்கு போயஸ் கார்டனில் அனுமதி மறுக்கப்பட்டது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், என்னதான் தன்னை பின்னால் இருந்து இயக்குபவராக நடராஜன் இருந்தாலும், அதிமுகவின் தலைமைக்கு அவரின் அடிபடக்கூடாது என்பதில் சசிகலா தெளிவாக இருக்கிறாராம். ஏனெனில், அவரை முன்னிறுத்தினால் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பதை புரிந்து கொண்டுள்ளார் சசிகலா.
 
அதன் விளைவாகவெ, ஜெ. உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த போது, நடராஜன் ஒரு ஓரமாகவே நின்று கொண்டிருந்தார். தற்போது அவருக்கு போயஸ் கார்டனில் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஜெ.வின் மறைவுக்கு பின் வி.கே. சசிகலா என குறிப்பிட்ட ஊடகங்கள் தற்போது சின்னம்மா என அழைக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக போஸ்டர்கள் மற்றும் பேனர்களிலும் அதுவே தொடர்கிறது. எந்த இடத்திலும் நடராஜனின் பெயரோ அல்லது புகைப்படமோ வந்துவிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
 
அடுத்த கட்டுரையில்