வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை எவ்வளவு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சனி, 9 டிசம்பர் 2023 (18:12 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தது என்பதும் இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

மழை நின்று ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வடிவ வில்லை. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இயல்புநிலை திரும்பி வருவதை அடுத்து தற்போது நிவாரணத் தொகை குறித்து அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த குடிசைகளுக்கு வழங்கப்படும் ரூ.5,000 தற்போது ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும் என்றும், வெள்ளாடு, செம்மறியாடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்.  முழுமையாக சேதமடைந்த மீன்பிடி வலைகள் உட்பட கட்டுமரங்களுக்கு நிவாரணம் ரூ.50,000 வழங்கப்படும்.

பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு நிவாரண நிதி ரூ.10,000-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் தரப்படும்

 புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்