உடல் நலம் தேறி வரும் கருணாநிதி ; நினைவாற்றல் திரும்புகிறது

புதன், 1 நவம்பர் 2017 (10:00 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு மற்றும் முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சளி தொள்ளை காரணமாக அவரது குரல் வளையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அவரால் பேச முடியவில்லை. 
 
அந்நிலையில்தான் சமீபத்தில் அவர் திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், கருணாநிதியின் கொள்ளுபேரனுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவிற்கும் கோபாலபுரம் வீட்டில் சமீபத்தில் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. 


 

 
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று இரவு கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அவரோடு, ஜி.கே.மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சென்றிருந்தனர். அவரைக் கண்டதும் அவர் யார் எனக் கருணாநிதி கண்டுகொண்டார். மேலும், யார் வந்திருக்கிறார் எனத் தெரிகிறதா? என ஸ்டாலின் கேட்க, அதை உணர்ந்த கருணாநிதி பேச முடியாமல் தவித்துள்ளார். அவரது உதடும், கண்களும் அவர் ராமதாசை கண்டுகொண்டதை உணர்த்தின. மேலும், ஜி.கே. மணியையும், மூர்த்தியையும் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.
 
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் “அவர் என்னை புரிந்துகொள்கிறார். அவருக்கு எல்லாம் தெரிகிறது. நினைவாற்றல் நன்றாகவே இருக்கிறது. என்னிடம் பேச முயற்சிக்கிறார். அவரை சந்தித்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
 
இதன்  மூலம் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்