திருச்சியில் மாநாடு ; ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு : திட்டம் என்ன?

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:05 IST)
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சிஸ்டம் சரியில்லை.. போர் வரும்போது பார்த்துக்கொள்வோம். தயாராக இருங்கள்.. என சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பேசியதும், அவரின் ரசிகர்கள் பரபரப்பானார்கள். ரஜினியின் அந்த பேச்சு அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. ஆனால், காலா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
 
ரஜினியை வீட்டில் சந்தித்து பேசிய காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார், அவரோடு காந்திய மக்கள் இயக்கமும் சேர்ந்து பயணிக்கும் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், வருகிற 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு கலந்து கொள்ளுங்கள் என ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். 
 
அந்த மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

வெப்துனியாவைப் படிக்கவும்