மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார்: பொன்.ராதாகிருஷ்ணன்

திங்கள், 26 மார்ச் 2018 (09:02 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வருக்கு கூட்டணி கட்சி தலைவரான ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாதான் குறுக்கே இருப்பதாகவும், அவரிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுகவின் ஸ்டாலினும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய இருவரும் கர்நாடக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டால், அவர்கள் இருவரும் பெங்களூர் சென்று வர தான் சிறப்பு  விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தர தயார் என்றும் அவர் மேலும் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து நாடகம் ஆடுவதாகவே தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்