முருகர் உங்களை காக்க மாட்டார்... காங். சாடிய பொன்னார் !!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (15:48 IST)
கே.எஸ்.அழகிரி வேல் யாத்திரையை விமர்சித்ததற்கு தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை பாஜகவின் வேல் யாத்திரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை திருத்தணியில் யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.    
 
இந்நிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என பாஜக தமிழக தலைவர் எல்,முருகன் கூறியுள்ளார். இதனிடையே கே.எஸ்.அழகிரி இது குறித்து விமர்சித்ததற்கு தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, தமிழ்க்கடவுள் முருகனை இதயத்தில் இருத்தி தருமத்தை காக்கும் வேலாயுதத்தை வழிபடுகிறார்கள். அது தருமத்தை நிலைநாட்டும் ஆயுதம். எனவேதான் காக்க காக்க கனகவேல் காக்க என்று மனம் உருகி வேண்டுகிறார்கள். அது காங்கிரசை காக்காது. தவறு செய்பவர்களை காக்காது.
 
தர்மத்தை காக்கவும், ஊழலை அழிக்கவும்தான் வேல் யாத்திரை. வேல் வன்முறைக்கான ஆயுதம் என்றால் தவறிழைத்த சூரனை வதம் செய்ததைகூட சரி இல்லை என்கிறாரா? முருக பக்தர்களை காயப்படுத்திய இந்த செயல் கண்டனத்துக்குரியது. முருக பக்தர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என பேட்டியளித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்