கூவத்தூரில் 144 தடை உத்தரவு - தடுத்து நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:53 IST)
சசிகலா மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி முதல், அதிமுக எம்.எல்.ஏக்கள், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ‘கோல்டன் பே ஹவுஸ்’ எனும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபின், ஆளுநரிடம் அவர்களை அழைத்து செல்லும் முடிவில் இருந்தார் சசிகலா. ஆனால், தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்து விட்டதால், எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. 
 
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக, தனது ஆதரவாளர்களோடு முதல்வர் ஓ.பி.எஸ் கூவத்தூருக்கு செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு, மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஓ.பி.எஸ் முயல்கிறார் எனவும், அவர் அங்கு வரக்கூடாது என அவர்கள் குரல் எழுப்பினர்.   
 
ஓ.பி.எஸ் அங்கு சென்றால், அவருக்கு சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என பரபரப்பு ஏற்பட்டது. எனவே, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக, கூவத்தூரில் போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். 
 
இந்நிலையில், கூவத்தூருக்கு ஓ.பி.எஸ் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், அவரின் ஆதரவாளரும், அதிமுக அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன், கூவத்தூருக்கு சென்றார். ஆனால், கோவளம் கடற்கரையின் அருகே போலீசார் அவரை தடுத்தி நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
 
கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்