பணம் வந்துட்டா உயர்ஜாதியா? இளையராஜா குறித்து இளங்கோவன்! – கடுப்பான பா.ரஞ்சித்!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:54 IST)
இளையராஜா குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மேடையில் தரகுறைவாக பேசியுள்ளதாக பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர்.

இந்த சர்ச்சை குறித்து பேசிய இளையராஜா, தான் தன் மனதில் பட்டதை பேசியுள்ளதாகவும், அதை திரும்ப பெறப்போவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் “வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்” என மறைமுகமாக இளையராஜாவை குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரைப்பட இயக்குனரும், தலித் சமூக செயல்பாட்டாளருமான பா.ரஞ்சித் “'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்