மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரத்தியோக தீயணைப்பு நிலையம் திறப்பு விழா!

J.Durai
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:48 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோயிலை சுற்றிலும் நெருக்கடியான பகுதி என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் விதமாக சுழற்சி முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் தினமும் ஈடுபடுகின்றனர்.
 
கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் பணியிலுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
 
இது தவிர, சட்டம், ஒழுங்கு, குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கென தனி காவல் நிலையமும் செயல்படுகிறது. ஆனால், கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் எதிர்பாராத தீ விபத்துக்களை தடுக்க, திடீர் நகரில் இருந்தே தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்க வேண்டி இருந்தது. போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் கோயில் பகுதிக்கு தீயணைப்பு வாகனம் துரிதமாக வருவதில் நடைமுறை சிக்கல் இருந்தது. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வீரவசந்த ராயர் மண்டபம் தீவிபத்தால் சேதமடைந்தது.
 
அப்போது, தீயணைப்பு வீரர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவசர நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட கோயில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அவசியம் என்ற கோரிக்கை எழுந்தது.
 
இதன் தொடர்ச்சியாக இச்சம்பவத்திற்கு பின், மீனாட்சி அம்மன் கோயிலுக்கென பிரத்யேக தீயணைப்பு நிலையம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, கோயில் மேற்கு கோபுரம் அருகே திடீர் நகர் தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டில் தற்காலிகமாக செயல்படும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து வந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான தொடக்கப் பணிகளை விரைவு படுத்தி முடிவடைந்தது.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான புதிய தீயணைப்பு நிலையம் ரூ.1.17 கோடியில் 3,053 சதுரடி பரப்பளவில் அமைந்திட நடவடிக்கை எடுத்தார். 
 
ஒரே நேரத்தில் இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், வீரர்கள் தங்கும் அறைகள், ஓய்வறைகள் என, தேவையான கட்டிடங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறக்கப்பட்டு மதுரை மத்திய தொகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில் பகுதியில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்