சில்லி சிக்கன் தருவதாக கூறி 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது முதியவர்!

திங்கள், 24 ஜூலை 2017 (11:58 IST)
கோவை மாவட்டத்தில் 12 வயதான சிறுமி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் சில்லி சிக்கன் தருவதாக கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள நெகமம் அருகே கூலித்தொழிலாளி ஒருவரின் 12 வயது மகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் ஆறுச்சாமி என்ற 55 வயதான நபரும் வசித்து வருகிறார்.
 
டிராக்டர் ஓட்டுநரான ஆறுச்சாமியின் முதல் மனைவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் ஆறுச்சாமி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆறுச்சாமி தனது பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியிடம் சில்லி சிக்கன் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
 
இதனை நம்பி சென்ற சிறுமியை ஆறுச்சாமி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை.
 
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமி வாந்தி எடுத்ததை அடுத்து அவரை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவர அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்ததில் பக்கத்து வீட்டில் உள்ள 55 வயதான ஆறுச்சாமி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து சிறுமியின் தாய் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆறுச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்