இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதி இல்லை.! மதுரை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு.!!

Senthil Velan

செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:03 IST)
இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழனி கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மிகவும்  பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
 
இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.
 
தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும் மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்து அல்லாதவர் பழனி கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கில்  மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
 
இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார்.

ALSO READ: தேர்தலுக்கு முன்பு ஆன்மீக பயணம்.! ஆழ்ந்த தியானத்தில் எடப்பாடி பழனிசாமி..!!
 
மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும் அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்திரவாதம் “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்