சிறையில் சசிகலாவிற்கு என்ன சலுகைகள்? - சிறை அதிகாரி விளக்கம்

வெள்ளி, 31 மார்ச் 2017 (12:42 IST)
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் அளிக்கப்படுவதில்லை என சிறை அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு ஒரே அறையில் அவரின் உறவினர் இளவரசியும், மற்றொரு அறையில் சுதாகரனும் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சிறையில் சசிகலாவிற்கு பவ்லேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என பெங்களூர் சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி வீரபத்திரசுவாமி கூறியுள்ளார். 
 
சமீபத்தில் வேலூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு என்ன சலுகையோ அதுதான் அவருக்கும் வழங்கப்படுகிறது. அதேபோல் வெளியிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கவும் அனுமதி கொடுக்கப்படவில்லை. மற்ற கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவுதான் அவருக்கு அளிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி யாரையும் சந்திக்க அனுமதி அளிப்பது கிடையாது. அவர் யாரை சந்திக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்