இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை மற்றும் காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. .
அதே நேரத்தில் செப்டம்பர் 1 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
மத்திய மேற்கு, அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு கொங்கன்-கோவா பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
கர்நாடகக் கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில், சில நேரங்களில் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.