உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Mahendran
சனி, 15 மார்ச் 2025 (13:35 IST)
இன்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
 
உழவர் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை நேரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கு ஆன்லைன் டெலிவரி வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உள்ளூர் இணைய வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
 
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மலைவாழ் உழவர்களுக்கு ஆதரவாக – 63,000 பேர் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
வேளாண்மை ஆராய்ச்சிக்காக – "டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" அமைக்கப்படும்.
 
தர நிர்ணய ஆய்வகங்கள் – சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர சோதனை ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
 
புவிசார் குறியீடு – நத்தம் புளி உள்ளிட்ட ஐந்து முக்கிய விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் – 9,36,000 விவசாயிகள் பயனடைய, ரூ. 269.50 கோடி நிதியுடன் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்.
 
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பயிர்களில் ஏற்படும் மாற்றங்கள் கணிக்கப்படுகின்றன – 2030, 2050 ஆண்டுகளில் விளையும் விளைவுகளை ஆராய ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்