இலை சாயும், சூரியன் அஸ்தமிக்கும்: வசனங்களை அள்ளி வீசும் நாஞ்சில் சம்பத்!!

சனி, 11 மார்ச் 2017 (13:25 IST)
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நிச்சயம் திமுக தோல்வியைத் தழுவும் என சில வரலாற்று சம்பவங்களை முன்வைத்து நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 


 
 
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளது: 
 
ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று அதன் செயல் தலைவர் திருவாய்மலர்ந்து அருளியிருக்கிறார். பன்னீர் என்கிற இடைச்செருகல் தனக்கு பக்கபலமாக இருக்கும், அதிமுகவின் வாக்குவங்கி சிதறும் என்ற கனவில் மூழ்கிப்போயுள்ளார் மு.க.ஸ்டாலின். 
 
ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தில் தலைநகர் சென்னையில் எல்லாத் தொகுதிகளிலும் திமுக வெல்ல அதிகாரத்தில் இருந்த எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்த ஒரே தொகுதி ஆர்.கே.நகர். அந்த தகுதி ஆர்கே நகர் தொகுதிக்கு இன்றைக்கும் இருக்கும் என்றைக்கும் இருக்கும். 
 
அம்மாவுக்கு ஆதரவு அளித்த ஆர்.கே.நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்தும் அரசின் சார்பில் கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, வேலை வாய்ப்பு முகாம் என சொல்லிமாளாத சாதனைகளை அம்மாவின் அரசு செய்து கொடுத்து இருக்கிறது.
 
ஆர்.கே.நகர் மக்கள் நன்றி உணர்ச்சியுள்ள மக்கள், அந்த மக்களை திமுக திசை திருப்ப முடியாது, இலை சாயும் பக்கமே, வெற்றிக்குலை சாயும்; ஆர்கே நகரில் சூரியன் அஸ்தமிக்கும் என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்