அனிதா மரணத்தில் மர்மம்; நீட் குறித்து அவதூறு பரப்பும் நக்சலைட், ஜிகாதிகள்: அர்ஜூன் சம்பத் புகார்!

திங்கள், 4 செப்டம்பர் 2017 (15:47 IST)
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு பலர் நீதி கேட்டு போராடினாலும் அவர் மரணம் மீதும் சிலர் சந்தேக கணைகளை வீசுகின்றனர்.


 
 
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் அனிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவரை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அனிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கண்டறிய வேண்டும். நீட் தேர்வுக்கு ஆதரவு அளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் இந்து இயக்கத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
 
நீட் தேர்வு குறித்து அவதூறு பரப்பி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை உண்டாக்க நினைக்கும் நக்சலைட், ஜிகாதி, கிறிஸ்துவ, கம்யூனிச, திராவிட கழகங்கள், மே 17 இயக்கம் குறிப்பிட்ட தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும்.
 
நீட் தேர்வு குறித்து அவதூறு பரப்புவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் கமல், திருமாவளவன், சீமான், கெளதமன், அமீர் போன்றோரின் தேசவிரோத கருத்துகளைத் தடை செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்