தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆட்டு இறைச்சியை ஒரே மாதிரியான விலையில் விற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழர்களின் அசைவ உணவு பழக்கத்தில் ஆட்டு இறைச்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலும், கோவில் திருவிழா என்றாலும் அனைத்தும் ஆட்டுக்கறி சமைப்பது வழக்கமாக உள்ளது. அதேசமயம் ஆட்டுக்கறியின் விலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது.
முக்கியமாக பண்டிகை நாட்களில் ஆட்டுக்கறிக்கு கிராக்கி அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சமயங்களில் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆட்டுக்கறி கிலோ சுமார் ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையாகிறது. ஆட்டுக்கறிக்கு கிராக்கி உள்ள பகுதிகளில் இன்னும் கூடுதலாக விற்பனையாகிறது.
இந்நிலையில் ஆட்டுக்கறிக்கு தமிழகம் முழுவதும் தினசரி ஒரே விலையை நிர்ணயிக்க உள்ளதாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் ஆட்டுக்கறி என்ன விலைக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பை தெரிந்துக் கொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K