அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறும் 10 வகை உரிமங்களை இனி இணையத்திலேயே விண்ணப்பித்து பெறுவதற்கான எளிமை ஆளுமை என்னும் புதியத் திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
திமுகவின் சட்டமன்ற ஆட்சி காலம் இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக மக்களை அதிகம் அலைய வைக்கக்கூடிய அரசு சார்ந்த செயல்பாடுகளை அதிகபட்சமாக நவீன டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல சேவைகள் ஆன்லைன் வசதிக்கு மாற்றப்பட்டது.
அவ்வாறாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ”எளிமை ஆளுமை” என்னும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நிர்வாக சீர்திருத்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசிடம் பெறப்படும் 10 வகை உரிமங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.
அதன்படி சுகாதார சான்றிதழ், பொது கட்டிட உரிமம், முதியோர் இல்லங்கள் தொடங்குவதற்கான உரிமம், மகளிர் விடுதிகள் தொடங்குவதற்கான உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், புஞ்சை நிலங்களை விவசாயம் இல்லாத பிற செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்பட 10 சேவைகளின் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு மக்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K