உள்நோக்கத்துடன் விவரமறியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் டிஆர்பி ராஜா..!

புதன், 5 ஜூலை 2023 (17:10 IST)
உள்நோக்கத்துடன் விவரமறியாமல் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என தொழில்துறை  அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
உள்நோக்கத்துடன் பேசும் விவரமறியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு: 
காவிரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. அடி தண்ணீர் இந்த ஆண்டு 2.833 டி.எம்.சி. அடியாகக் குறைந்திருப்பதற்குக் காரணம், கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லை என்பது தான். அதனால் அணைகள் நிரம்பவில்லை. பருவமழைத் தவறும் போது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் இதே நிலைமைதான். 2016, 2017 & 2019 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. 
 
இருப்பதிலேயே மிகவும் குறைவு என்பது நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 2017ஆம்  ஆண்டு ஜூன் மாதம்தான். அப்போது வெறும் 0.77 டி.எம்.சி. அடி அதாவது கிடைக்கவேண்டிய 9.19  டி.எம்.சி.ல் 0.77 டி.எம்.சி.(8.38%) தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்தது !
 
தற்போது நீர்வரத்து குறைவாக இருந்தாலும், முறையாக மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளால், காவிரியின் கடைமடை வரை மேட்டூர் அணை நீர் பாய்ந்து, #டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நல்லமுறையில் நடந்து வருகிறது. கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் கூட்டத்தினால் கதிகலங்கி, தண்ணீர் அரசியல் செய்ய நினைக்காதீர்கள்.
 
ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் கேரளா கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழைக்கு அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. எனவே தங்களுக்கு கவலை வேண்டாம். முதலில், நீங்கள் சிக்கியுள்ள "சுழலில்" இருந்து உங்களை விடுவித்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
 
தமிழ்நாட்டின் நலனை காக்க மக்களின் நம்பிக்கைக்குரிய #திராவிட_நாயகன் #முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்