கமலை தவளையுடன் ஒப்பிட்டு ஓபிஎஸ்-ஐ சீண்டிய அமைச்சர் சி.வி.சண்முகம்!

புதன், 19 ஜூலை 2017 (11:57 IST)
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என கூறியதை அடுத்து தமிழக அமைச்சர்கள் வரிசையாக அவரை வசைபாடி வந்தனர்.


 
 
இந்த விவகாரத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. இந்நிலையில் நடிகர் கமலையும், ஓபிஎஸ்-ஐயும் சீண்டும் விதமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனை மிரட்டும் தொணியில் பேட்டியளித்து வந்ததையடுத்து, கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார் அதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தது.
 
ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் செய்தியாளர்களை சந்தித்து கமலுக்கு ஆதரவாக பேசினார். மேலும் ஓபிஎஸ் கூறியபோது, கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது என்றார்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் கருத்து கூறியதை அடுத்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகர் கமல் பேசினால் மட்டுமல்ல ஒரு தவளை பேசினாலும் கூட ஓபிஎஸ் பதிலளிப்பார் என கூறினார். இதில் அவர் கமலை தவளை போன்று மட்டம் தட்டியும், ஓபிஎஸ்-ஐ சீண்டும் விதமாகவும் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்