வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து வரும் நிலையில் மதுரை மல்லிகை பூக்களுக்கு சிறப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது:
"மலர் சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகளுக்கு தினசரி வருமானத்தை உறுதி செய்ய ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மல்லிகை திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடிகள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரோஜா மலர் சாகுபடிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிக், மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் காய்கறி விதைத்தொகுப்புகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடி தொகுப்புகள், 1 லட்சம் இல்லங்களுக்கு பயிர் விதை தொகுப்புகள் வழங்கப்படும்.