ஒருநாள் கேப்பில் இருமடங்கு விலை எகிறிய காய்கறிகள் – அதிர்ச்சியில் வியாபாரிகள்

திங்கள், 23 மார்ச் 2020 (09:42 IST)
நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையில் இன்று காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட முக்கியமான மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன.

இன்று காலை 5 மணி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல செயல்பட தொடங்கியது. ஒருநாள் முழுவதும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டதால் சந்தைக்கு வரும் காய்கறி லாரிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளும் நேற்று முந்தைய தின விலையை விட இருமடங்கு அதிகரித்துள்ளது.

தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ.40க்கும், கிலோ ரூ.30க்கு விற்பனையாகி வந்த உருளை கிழங்கு ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது. மேலும் அவரைக்காய், காரட், முருங்கைக்காய் உள்ளிட்டவையும் விலையேற்றம் கண்டுள்ளதாக சில்லறை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வெங்காயம் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி விற்பனையாகி வருகிறது.

நாளை வழக்கம்போல காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கினால் விலை குறைய தொடங்கும் என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்