’கிங்டம்’ திரையிட்ட தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்.. என்ன காரணம்?

Mahendran

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (17:14 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'கிங்டம்' திரைப்படத்திற்கு, நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
'கிங்டம்' படத்தின் கதை இலங்கையில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. இதில், இலங்கை தமிழர்கள் குற்றப்பரம்பரை போல சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இலங்கையில் உள்ள மலையக தமிழர்களை, இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கியது போல சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்றும், இது தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது போல் இருப்பதாகவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
நாம் தமிழர் கட்சியினர், இந்த படத்தைத் திரையிட்ட திரையரங்குகளை முற்றுகையிட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சில ஊர்களில் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம், தமிழ்நாட்டில் 'கிங்டம்' படத்திற்கு ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்