எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல.. டிஜிட்டல் போர்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்..!

Siva

வியாழன், 11 ஏப்ரல் 2024 (08:22 IST)
கரூரை சேர்ந்த ஆசிரியர் தனது வீட்டின் முன் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று டிஜிட்டல் போர்டு வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் என்றாலே வாக்குக்கு பணம் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் தேர்தல் கமிஷன் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கவனமாக இருந்தாலும் பணப்பட்டுவாடா சர்வசாதாரணமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதும் தெரிந்தது. 
 
வாக்காளர்களும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தை தானே கொடுக்கிறார்கள் என்று அந்த பணத்தை வாங்கும் மனநிலைக்கு வந்து விட்டனர் என்பதும் வாக்குக்கு பணம் பெறுவது ஒரு குற்றம் அல்ல என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட பலர் வந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியர் தனது வீட்டின் முன் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற டிஜிட்டல் பேனரை வைத்துள்ளார். எங்கள் வீட்டில் நான்கு பேர் இருக்கிறோம், எங்கள் 4 வாக்குகளை நாங்கள் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க மாட்டோம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த போர்டு வைத்துள்ளோம்.
 
இதை பார்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். எந்தவித கைமாறும் பெறாமல் நமது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த போர்டு வைத்திருக்குறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த போர்டு மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்