மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் கன்வான் காவல்நிலைய பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவர் மீது இந்தூர் காவல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் அளித்துள்ளார். இந்த புகார், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, போலீசார் இதை 'பூஜ்ய எஃப்.ஐ.ஆர்' ஆகப் பதிவுசெய்து தார் காவல்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளனர்.
அந்தப் புகாரில், "எனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்ட பழக்கத்தால் அவருக்கு கடன் அதிகரித்தது. அந்த கடனை அடைப்பதற்காக, தனக்கு பணம் கொடுத்த நண்பர் ஒருவருடன் உடல் உறவு கொள்ளுமாறு கணவர் என்னை கட்டாயப்படுத்தினார்" என்று அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "₹50,000 கடனை அடைப்பதற்காக, கணவன் தனது மனைவியை நண்பருக்கு 'விற்றதாக' கூறப்படுகிறது. அதன்பின், அந்த நண்பர் அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள கணவன் மற்றும் அவரது நண்பர் இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.