மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (08:49 IST)
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் காந்தி அடிகள், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று சொன்ன உயர்ந்த கருத்தியலுக்கு மூடு விழா நடத்துகின்ற வகையில், மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தின் வேர்களாகக் கருதப்படுகின்ற பஞ்சாயத்து அமைப்புக்களை அடியோடு ஒழித்துக் கட்டுகின்ற அளவுக்கு முடிவு செய்துள்ளது.
 
இதை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது மிகவும் வேதனையைத் தருகின்ற செய்தியாகும். முன்னோக்கி வரும் ஜனநாயகத்தைப் பின்னோக்கி இழுக்கும் எதிர் மறை முயற்சியாகும்.
 
இனியாவது பாஜக அரசு, குறிப்பாக மாதம் ஒரு முறை “மன்-கி-பாத்” என்ற முறையில் நாட்டு மக்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி மனதிலே கொண்டு மக்களாட்சியின் உயிர் மையமான உள்ளாட்சி அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் முடிவினை உடனே மாற்றிக் கொண்டு, அதனை நாட்டிற்கும் வெளிப்படையாகத் தெரிவிக்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்