தி.மு.க.வின் முப்பெரும் விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான 'பெரியார் விருது'க்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க தலைமைக்கழகம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சி தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 அன்று, கரூரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் மற்றும் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகள்:
'பெரியார் விருது': தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
'அண்ணா விருது': தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமன்.
'கலைஞர் விருது': அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சோ.மா. ராமச்சந்திரன்.
'பாவேந்தர் விருது': தி.மு.க.வின் மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன்.
'பேராசிரியர் விருது': கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மருதூர் ராமலிங்கம்.
'மு.க.ஸ்டாலின் விருது': ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா. பழனிச்சாமி.
இந்த விருதுகள், கட்சியின் கொள்கைகளுக்காகவும், வளர்ச்சிக்கும் பாடுபட்ட தொண்டர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன.