கள்ளக்குறிச்சி விவகாரம்.!ஆளுநருடன் பிரேமலதா சந்திப்பு.! சிபிஐ விசாரணை கோரி மனு.!

Senthil Velan

வெள்ளி, 28 ஜூன் 2024 (14:18 IST)
ஆளும் கட்சியின் உதவியோடுதான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
 
கள்ளகுறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்கூட்டியே கள்ளச்சாராய விற்பனையை தடுத்து இருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றார்.
 
கள்ளச் சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும் அப்படி இருக்கும்போது கள்ளச் சாராயம் மீண்டும் ஏன் வருகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு யார் துணை போகிறார்கள்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது என்று தெரிவித்த பிரேமலதா,  ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
 
ஆளும் கட்சியின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று அவர் கூறினார். மக்களின் வறுமையை பயன்படுத்தி கள்ளச் சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர் என்றும்   கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் உள்ள மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் சொன்னதை ஆளுநர் மிக கவனமாகக் கேட்டதாகவும் ஆளுநர் முகத்தில் மிகப்பெரிய கவலை தெரிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: தமிழகத்தில் ஜூலை 4 வரை மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அலெர்ட்..!!

தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று ஆளுநர் மனவருதத்தோடு கூறியதாக பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்