காலில் புடவை மாட்டி தடுமாறிய ஜெயலலிதா: தாங்கிப்பிடித்த சசிகலா!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (11:02 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை வெளியிட பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை வெளியிடவில்லை. ஜெயலலிதா மரணமடைந்த பின்னரும் அதனை வெளியிடவில்லை.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து ஓபிஎஸ் அணியினர் சசிகலா அணியை குற்றம் சுமத்துவதால் தற்போது ஜெயலலிதாவின் சிகிச்சை புகைப்படத்தை வெளியிட உள்ளதாக சசிகலா அணியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தி இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு அவரது உடல்நிலை பற்றிய எல்லா தகவலும் தெரியும். அவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கால் வலியால் அவதிப்பட்டதால் சரியாக நிற்கக்கூட முடியாமல் இருந்தார்.
 
உடல் நலம் பாதிக்கப்பட்டு கால் வலி அதிகமாக இருந்ததால் சுற்றுப்பயணங்களையும், பொது நிகழ்ச்சிகளையும், பிரச்சார கூட்டங்களையும் கூட தவிர்த்து வந்தார். கடைசியாக ஜெயலலிதா கலந்துகொண்ட மெட்ரோ ரயில் நிலைய தொடக்க விழாவின்போது நிற்க முடியாமல் கை, கால்கள் நடுங்கும் நிலையில் இருந்தார்.
 
அதன் பின்னர் வீடு திரும்பியபோது ஜெயலலிதா காரில் இருந்து இறங்க முடியாமல் தவித்தார். காலில் புடவை மாட்டி தடுமாறிய ஜெயலலிதாவை சசிகலா ஓடிப்போய் கைத் தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்தார்.
 
இது மாதியான உடல்நலக்குறைவால் வீட்டிலே சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயலலிதா. நிலமை மோசமானதால் தான் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல விதமான சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் தராமல் போனதால்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்