ஜெ. தீபா புதிய கட்சி குறித்து இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு: ஆதரவாளர்கள் திரண்டனர்!

திங்கள், 16 ஜனவரி 2017 (17:18 IST)
தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அவரது அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் புகழை பரப்பவும், தனது அத்தையின் மக்கள் பணியை தொடர அரசியலுக்கு வர இருப்பதாக கூறினார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிமுகவினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தினமும் பலர் தீபாவை சந்தித்து அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
இதனையடுத்து தி.நகரில் உள்ள தனது வீட்டின் முன்னர் குவியும் ஆதரவாளர்களிடம் பேசிய தீபா தான் நிச்சயம் விரைவில் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறினார். அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக தீபா கூறினார்.
 
நாளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதால் இன்று மாலை இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிய கட்சி குறித்து அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து தீபா வீட்டு முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தீபா ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவார் என தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து தீபா வீடு உள்ள சாலையில் போக்குவரத்து நிறும்தம் செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக தீபா துவங்க இருக்கும் கட்சி நன்முறையில் ஆரம்பிக்கவும், கட்சியினரை நல் வழியில் வழிநடத்திடவும் வேண்டி சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் இன்று காலை K.R.S.சுசீந்திரன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்