தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்க புதிய வழி சொன்ன ஹெச்.ராஜா!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2016 (14:25 IST)
திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. தமிழகம் முன்னேற வேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய ஹெச்.ராஜா, “தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இந்தியாவிலேயே, ஒரு மாநிலத்தில் முதன் முதலில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சோதனை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. தமிழகம் முன்னேற வேண்டுமானால், திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தமிழகம் ஊழலில் சிக்கி தகிக்கிறது. தற்போது தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

சமீபத்தில் சேகர்ரெட்டி என்பவர் வீட்டில் ரூ.100 கோடிக்கு அதிகமான பணம், 170 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இவர் ஆளும் அதிமுக கட்சியில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்.

எனவே தமிழகம் முன்னேற, திராவிடக் கட்சிகள் அனைத்தையும் ஒழித்து, அப்புறப்படுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்பதை தற்போது நடக்கும் சம்பவங்கள் கூறி வருகின்றன” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்