எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (14:14 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, எடப்பாடி பழனிச்சாமி குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். “ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி பழனிச்சாமி 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால், எடப்பாடி பழனிச்சாமி சிங்கக்குட்டி,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
அதிமுக கூட்டணியைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “யாரும் கவலைப்பட தேவையில்லை. மக்களுக்கு தேவையான ஒரு வலிமையான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார்,” என உறுதிபட கூறினார்.
 
பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கப்போவதாக இருந்தால், அதைக் குறித்து அவர் ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார் என்றும், ஊடகங்கள் கற்பனைக் கதைகளை எழுத வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
அத்துடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக வேறு ஒருவர் வருவதாக இருந்தால், அதிமுகவிற்கு அதில் வருத்தமோ மகிழ்ச்சியோ இல்லை என்றும், “அது அவர்களது கட்சி விவகாரம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
 
இன்று துணை பொதுச்செயலாளர் பதவியை இழந்துள்ள அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்களை தரைக்குறைவாகவும் பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இலவச பேருந்து சேவையில் பயணம் செய்யும் பெண்களை ‘ஓசி பயணிகள்’ எனக் கேலி செய்தவர் பொன்முடிதான். சமீபத்தில் கூட டெல்லிக்கு அவர் விமானத்தில் ஓசியில் தான் சென்று வந்தார்,” என்றும் அவர் விமர்சித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்