மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

Mahendran

வெள்ளி, 21 மார்ச் 2025 (18:45 IST)
மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது என்று கூறிய அதிகாரிக்கு  உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் 2020 ஆம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் மறுமணம் செய்து கொண்டார்.
 
இந்த நிலையில், அந்த பெண் ஊழியர் கர்ப்பமான நிலையில் மகப்பேறு விடுப்பு கோரிய விண்ணப்பத்தை தனது அலுவலக அதிகாரியிடம் சமர்ப்பித்தார். ஆனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவில்லை என்பதற்காக மகப்பேறு விடுப்பை வழங்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கு எதிராக, அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கணவரை இழந்த பிறகு கோவிலில் திருமணம் செய்ததாகவும், ஆனால் பதிவு செய்யவில்லை என்றும், திருமண புகைப்படங்கள் உள்ளதாகவும் அவர் விசாரணையின் போது தெரிவித்தார்.
 
இதைக் கேட்ட நீதிபதி கண்டனம் தெரிவித்து, "இது மனிதாபிமானமற்ற செயல். திருமணமான பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு பெற திருமண பதிவு கட்டாயமில்லை" என்று கூறினார்.
 
பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, ₹1 லட்சம் நிவாரணம் வழங்குமாறும், அடுத்த நான்கு வாரங்களில் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்