இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு

வெள்ளி, 14 ஜூன் 2019 (21:10 IST)
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென அவரை நோக்கி வந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார். இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய பின்னர் அந்த பகுதி வழியாக ரயில் முன் அந்த நபர் பாய்ந்து தற்கொலைக்கும் முயன்றார். ஆனால் அங்கே நின்றிருந்த ஒருசிலர் அந்த நபரை காப்பாற்றியுள்ளனர். 
 
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. 
 
இந்த நிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்