தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

Siva

திங்கள், 9 ஜூன் 2025 (14:05 IST)
தமிழக அரசியல் அரங்கில் புதிய திருப்பமாக, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவர் மாநில கொள்கைப் பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
பிகாரில் வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் விருப்ப ஓய்வு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு அவரை அதிகாரபூர்வமாக பணி விலக அனுமதித்தது.
 
அதையடுத்து, சென்னையின் பனையூரில் அமைந்த தவெக அலுவலகத்தில், கட்சித் தலைவர் விஜய்யின் முன்னிலையில், அருண்ராஜ் திங்கள்கிழமை நேரில் சென்று கட்சியில் இணைந்தார். அவரை வரவேற்று, மாநில கொள்கைப் பரப்புப் பொறுப்பாளராக நியமித்ததாக விஜய் அறிவித்தார்.
 
 “அருண்ராஜ், எனது ஆலோசனையின் கீழ், பொதுச் செயலாளர் ஆனந்தின் வழிகாட்டுதலுடன், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவார். அனைத்து நிர்வாகிகளும் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என விஜய் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, பல முக்கிய தலைவர்கள் தவெகவில் சேர்ந்துள்ளனர். அவர்களில், முன்னாள் அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர். ராஜலட்சுமி, எஸ். டேவிட் செல்வன், ஏ. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும், நீதிபதி சி. சுபாஷ், கல்வியாளர் என். மரிய வில்சன் போன்றோரும் இன்று தவெகவில் இணைந்தனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்