கொரோனாவுக்கு பயந்து குடும்பமே தற்கொலை! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

திங்கள், 10 ஜனவரி 2022 (09:30 IST)
மதுரையில் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜ். இவருக்கு திருமணமாகி ஜோதிகா என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஜோதிகாவுக்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவனை பிரிந்து வந்து தந்தை வீட்டோடு வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஜோதிகாவுக்கு இருமல், காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளா. அங்கு அவருக்கு கொரோனா சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவமனையில் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் கொரோனா பாதிப்பை நினைத்து பயந்த ஜோதிகா குடும்பத்தினர் விபரீதமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஜோதிகாவின் சகோதரரில் ஒருவர் மட்டும் விஷம் குடிக்காத நிலையில் மற்றவர்கள் விஷம் அருந்தியுள்ளனர். இதில் ஜோதிகா மற்றும் அவரது குழந்தை உயிரிழந்த நிலையில், ஜோதிகாவின் தாயாரும், மற்றொரு சகோதரனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை உரிய மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம் என்றும் மக்கள் அவசியமின்றி கொரோனாவை நினைத்து பயப்பட கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்