திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயிலில், ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரூ.3 கோடி மதிப்பிலான தனது இரண்டு வீடுகளின் சொத்து பத்திரங்களை, கோயில் உண்டியலில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
படவேடு கிராமத்தை சேர்ந்த 60 வயதான விஜயன் என்ற முன்னாள் ராணுவ வீரர், கடந்த மாதம் 8-ஆம் தேதி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தபோது இந்த சொத்துப் பத்திரங்களை உண்டியலில் போட்டிருக்கிறார். அத்துடன், தனது சொத்துகளை கோயில் பெயருக்கே எழுதிவைக்க விரும்புவதாகவும் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்தி அறிந்ததும், விஜயனின் மனைவி கஸ்தூரி மற்றும் அவர்களின் இரு மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் பதறியடித்துக்கொண்டு கோயிலுக்கு வந்தனர். சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றி தருமாறு விஜயனிடம் அவர்கள் கெஞ்சியுள்ளனர். ஆனால், விஜயன் தன் முடிவில் உறுதியாக நின்று, சொத்துகள் கோயிலுக்கே சொந்தம் என்று கூறிவிட்டார்.
விஜயனும் அவரது மனைவி கஸ்தூரியும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மனைவி, மகள்கள் மீதான கோபத்தின் காரணமாக விஜயன் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் சிலம்பரசன், "பத்திரங்கள் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று விளக்கினார்.