கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

Siva

வெள்ளி, 20 ஜூன் 2025 (08:00 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தன் சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்ட 8 பேருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜூன் 10 அன்று அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸில், சன் குழுமத்தில் பெரிய அளவிலான மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
சட்டவிரோதமாக பங்குகளை மாற்றுதல், பணமோசடி செய்தல், மற்றும் குடும்ப வாரிசுகளுக்கு சேரவேண்டிய சொத்துகளின் பங்கை மறுத்தல் போன்ற செயல்களில் கலாநிதி மாறன் ஈடுபட்டதாக அவர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
 
தன் தந்தை முரசொலி மாறன் மறைவுக்கு முன் இருந்த அசல் பங்குகளை மீண்டும் பெற வேண்டும் என்றும், கலாநிதி மாறன் சட்டவிரோதமாக பெற்ற அனைத்து சொத்துகள், ஈவுத்தொகைகள் மற்றும் சலுகைகளை ஏழு நாட்களுக்குள் திருப்பி தர வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
 
கலாநிதி மாறன் தனக்கு ஒரு பங்கு ரூ.10 வீதம் 12 லட்சம் பங்குகளை ஒதுக்கி, அதன் மூலம் சன் டிவியின் 60% கட்டுப்பாட்டை பெற்றதாகவும், இந்த பங்குகளின் உண்மையான மதிப்பு ரூ.3,500 கோடி வரை இருக்கும் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
 
மேலும்  சன் குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசடிகள் நடந்திருப்பதாகவும், இதில் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கும் சம உரிமை இருந்ததாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிதியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்